கடலூர்: கடலூரிலுள்ள கிறிஸ்துவ சபைக்கு வெடிகுண்டு புரளி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கடலூர் முதுநகர் அருகிலுள்ள செல்லங்குப்பத்தில், பெந்தெகொஸ்தே கிறிஸ்துவ சபை உள்ளது. இங்கு கிறிஸ்துவத்தின் ஒரு பிரிவினர் பிரார்த்தனை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த தபாலில், இந்த கிறிஸ்துவ சபைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடலூரிலிருந்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டினை கண்டறியும் கருவிகளுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.
தற்போது அமலில் உள்ள பொது முடக்கத்தினால் இந்த சபையில் வழிபாடுகள் நடைபெறாத நிலையிலும் காவல் துறையினர் சபையை முழுவதுமாக சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான சந்தேகப்படும்படியான பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த சில நாள்களில் இந்த சபைக்கு வந்துச் சென்றவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.