சென்னை: சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருமங்கலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆா்.கே.ஜலீல் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு, குறு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, மக்களின் நம்பிக்கையை வளா்க்கும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் ரமலான் நோன்பு காலத்தில் கூட பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்குச் செல்ல முடியவில்லை. எனவே சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில், தற்போதுள்ள சூழலில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் அங்கு கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசு, பொது முடக்கத்தை நீட்டித்து அண்மையில் வெளியிட்டுள்ள உத்தரவில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க விலக்கு எதுவும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.