கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே விவசாய நிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் பெருமாள்கோவில் மலை அடிவாரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான மானாவாரி நிலம் உள்ளது. அந்த நிலத்தை சனிக்கிழமை உழுதபோது, சில மண்பாண்டங்கள், மண் ஜாடிகள் மற்றும் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர் மோகன் குமாரமங்கலம் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்குச் சென்று பழங்காலப் பொருள்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது: சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த மண்ணால் செய்யப்பட்ட பொருள்களாக இவை காணப்படுகின்றன.
தாழியில் எலும்பு கிடைத்துள்ளது. பாத்திரங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொன்மையான மக்கள் வசித்துள்ள பகுதியாக இப்பகுதி இருந்திருக்கக்கூடும். அரசு அனுமதி பெற்று ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.