சென்னை: பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் பருவத் தேர்வுக்காக தங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 2020-ஆம் கல்வியாண்டில் ஏப்ரல்}மே மாதங்களில் நடங்கும் பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மார்ச் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்திருந்தது.
இதற்கிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 16-ஆம் தேதி முதலே கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளால் உரிய தேதிக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை.
இந்நிலையில், கல்லூரிகளை மீண்டும் திறந்து தேர்வுகளை நடத்த தமிழக உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.