திருச்சி: புதுதில்லியிலிருந்து திங்கள்கிழமை திருச்சி வந்த 558 பேரும் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சியிலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு சென்றிருந்தோரை சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வர வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, புதுதில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்ற ஊர் திரும்பாத 292 பேர், தமிழக மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த 14 பெண்கள் உள்பட 266 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என 558 பேரும் புதுதில்லியிலிருந்து மே 16 ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டனர். இவர்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தடைந்தனர்.
இதில், 292 இஸ்லாமியர்களை தனியார் கல்லூரி பேருந்துகள் மூலம் திருச்சி காஜாமலை அரபிக் கல்லூரியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 202 பேரும் 5 அரசுப்போக்குவரத்து பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.