ராமேசுவரம்/ராமநாதபுரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள உம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் ராமேசுவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரத்தை அறுத்துக் கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்றதால் அவை சேதமின்றி தப்பின.
ஆனால் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், துறைமுகத்தின் தடுப்புகளில் மோதியும் உடைந்து கடலில் மூழ்கின.
இதே போன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மற்றும் ஒரு விசைப்படகு ஆகியவை சேதமடைந்தன.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சேதுபதி நகர் உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால், ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.