வேதாரண்யம் அருகே இடி விழுந்து குடிசை தீக்கிரை
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இடி விழுந்ததில் குடிசை வீடு தீக்கிரையானது. மேலும் 4 தென்னை மரங்களும் எரிந்து சேதமடைந்தன.
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள உம்பன் புயல் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் வழக்கத்தைவிட திங்கள்கிழமை பலத்த காற்று வீசியது. ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ஏற்பட்ட மழைப் பொழிவின்போது இடி மின்னல் ஏற்பட்டது. வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெய்த இந்த மழை வேதாரண்யம் நகரப் பகுதியில் இல்லை.
தாணிக்கோட்டகம், கட்டளைத் தோப்பு பகுதியில் தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்திக்குச் சொந்தமான 4 தென்னை மரங்கள் தீக்கிரையானது. மேலும், அருகில் வீடும் எரிந்து நாசமானது. சந்திரகாந்தியின் மகன் நாகேந்திரன் வெளியூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால், சம்பவம் நேர்ந்தபோது உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.