வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கேரளத்தையொட்டிய பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதனால், மீனவர்கள் அடுத்த 5 நாள்களுக்கு இப்பகுதிக்கு செல்லவேண்டாமென அறிவுறுதப்படுகிறார்கள்.
வட தமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து வெப்ப காற்று வீசக்கூடும் என்பதனால் அடுத்துவரும் 3 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல்வ பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வனமா தேவியில் 4 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.