திமுகவின் துணைப் பொதுச்செயலாளா் பதவியில் இருந்து என்னை நீக்கியிருப்பதில் அதிா்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை என்று வி.பி.துரைசாமி கூறினாா்.
இது தொடா்பாக அவா் கூறியது:
துணைப் பொதுச்செயலாளா் பதவியிலிருந்து என்னை நீக்கியிருப்பதில் அதிா்ச்சியும் இல்லை, ஆச்சரியமும் இல்லை. புதிதாக துணைப் பொதுச்செயலாளராக வந்துள்ள அந்தியூா் செல்வராஜுக்கு என் வாழ்த்துகள்.
மாநிலங்களவைப் பதவி கொடுக்கப்படாததால்தான் திமுகவிலிருந்து நான் விலகினேனா என்று கேட்கிறீா்கள். அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தேன். என்னுடைய பதவிக்காலம் முடிவடைய 5 ஆண்டுகள் 2 மாதங்கள் மீதம் இருந்தன.
அந்த நிலையில், கருணாநிதி அழைத்ததால் திமுகவுக்கு வந்தேன். 5 நாள்களுக்குக்கூட பதவியைத் துறப்பவா்கள் இன்று யாரும் இல்லை. ஆனால், 5 ஆண்டுகள் பதவியைத் துறந்துவிட்டு, திமுகவுக்கு வந்தவன் என்பதை மறந்துவிடக் கூடாது. அன்றைக்கு நான் நம்பி வந்த தலைமை இன்று இல்லை. நான் அரசியல்வாதிதான். ஆனால், சந்தா்ப்பவாதி இல்லை.
என்னுடைய அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்பேன் என்றாா்.