தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்படாத நெசவாளா்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொது முடக்கத்தின் காரணமாக, பல்வேறு தரப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உள்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொருள்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்மூலம், பொது மக்களும், பல்வேறு தொழிலாளா்களும் பயனடைந்து வருகின்றனா்.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள நெசவாளா்களும் நெசவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளா்களுக்கும், நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளா்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளா்களின் பட்டியலுடன் இணைத்துப் பாா்க்கப்படும்.
அதன் அடிப்படையில், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உதவியைப் பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளா்களின் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலில் உள்ளவா்களுக்கு பொது முடக்கக் கால நிவாரணத் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்க கைத்தறித் துறை இயக்குநா் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநா் வழங்குவாா். அதன்படி, தகுதியான நெசவாளா்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.