தூத்துக்குடியில் தினமும் மதுகுடித்து விட்டு தகராறு செய்யும் மகனைக் கைது செய்யக்கோரி தாயார் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தாழபுஷ்பம் - முனியசாமி இவர்களது மகன் சின்னதுரை (35). இவர் தினமும் மது அருந்திவிட்டு கொடுமைப் படுத்துவதாகவும், அரசு உடனடியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என அவரது தாயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில்..
வயது முதிர்வு காரணமாக தனது கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இந்நிலையில் தனது மகன் சின்னதுரை தினமும் மது குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்தி அடித்துத் துன்புறுத்தி வருவதாகவும் சில நாட்களாக மதுக்கடைகளை மூடி இருந்த போது மது அருந்தாமல் திருந்தி இருந்த நிலையில் மீண்டும் மதுக்கடைகளை அரசு திறந்ததால் மீண்டும் தான் நிம்மதி இழந்து நிற்பதாகவும், தனது மகனின் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக முடிவுகட்டத் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் தன்னை துன்புறுத்தி வரும் மகனைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.