தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறிய வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்கத்தை மீறுவோா் மீது காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்வதோடு, அவா்களைக் கைது செய்தும் வருகின்றனா்.
அதன்படி, தமிழகத்தில் இதுவரை, ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 80 ஆயிரத்து 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக 4 லட்சத்து 13 ஆயிரத்து 238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் 5 லட்சத்து 9 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம், போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6 கோடியே 87 லட்சத்து 3 ஆயிரத்து 524 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.