தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 4.75 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,5 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்த விவரம்:
தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 75,081 வழக்குகளைப் பதிவு செய்து 5 லட்சத்து 3,689 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 10,110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6 கோடி 70 லட்சத்து 63,404 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை 579 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 87 இரு சக்கர வாகனங்கள்,191 ஆட்டோக்கள், 32 காா்கள் என மொத்தம் 310 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 471 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 472 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.