சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 86 பேர் சொந்த ஊருக்குப் பேருந்துகள் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேட்டூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி தனியார் தொழிற்சாலைகள், டீ கடைகள், ஹோட்டல்களில் வேலை செய்து வந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்த்தியதால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 86 தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சிக்குச் சொந்தமான மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
உணவின்றி தவித்த இவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் தன் சொந்த செலவில் உணவுகளை வழங்கினார். பின்னர் 86 தொழிலாளர்களும் சொந்த ஊருக்குச் செல்ல இரண்டு அரசு பேருந்துகள் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.