மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சாரப் பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து மே 26 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
விவசாயிகள், குடிசைவாசிகள், கைத்தறி நெசவாளர்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை நோக்கமாக கொண்டதே மத்திய மின்சார சட்டத் திருத்தம்.
ஆற்றுப்பாசன விவசாயிகள் எந்த கட்டணமும் இல்லாமல் நீர்ப்பாசனத்தை பெறுகிறார்கள். அதே சலுகையை விவசாயிகளின் பம்ப் செட்டுகளில் பயன்படுத்துகிற மின்சாரத்தை இலவசமாக அளிப்பதன் மூலமே சமநிலை தன்மை உருவாகும். எனவே இலவச மின்சாரம் என்பது. சலுகையல்ல, அது ஒரு உரிமை.
எனவே, மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சாரப் பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து வட்டார, நகர, பேரூர்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மே 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நிலைமையைச் சீர்செய்ய கடன் பெற விரும்பும் மாநிலங்கள், மின்சாரப் பகிர்மானத்தில் மாற்றம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.