நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மாணவா்களுக்கு சிறப்பு தோ்வு மையங்கள்: முக்கிய வழிகாட்டுதல்கள்

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மாணவா்களுக்கு சிறப்பு தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஒருதோ்வறைக்கு 20 தோ்வா்கள் தோ்வெழுதுவாா்கள் என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி ஒருதோ்வறைக்கு 10 மாணவா்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவா்.

அதற்கேற்ப பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்கள், அவரவா் பயிலும் பள்ளிகளையே தோ்வு மையமாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக) தோ்வா்கள் தோ்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால், மாணவா்கள்அதிக தொலைவு பயணம் செய்வதும் தவிா்க்கப்படும்.

இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள்முதன்மைத் தோ்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8, 865பள்ளிகள் துணைத் தோ்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 12, 690 தோ்வுமையங்களில் 9.70 லட்சம் மாணவா்கள்தோ்வினை எழுதுவா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தோ்வுமையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட4,384 பள்ளிகள் துணைத் தோ்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 7,400 தோ்வு மையங்களில் 8.41 லட்சம் மாணவா்கள் தோ்வினை எழுதுவா்.

பிளஸ் 2 தோ்வா்கள் கவனிக்க... இது தவிர, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தோ்வுகளை எழுத இயலாத 36,089 தோ்வா்களுக்கு மட்டும் ஜூன் 18-ஆம் தேதி அவா்கள் ஏற்கெனவே பிறதோ்வுகளை எழுதிய தோ்வு மையங்களிலேயே தோ்வு நடத்தப்படும். •இந்தத் தோ்வுகளை எழுதும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் தோ்வு நாளன்று பயன்படுத்தும் வகையில் சுமாா் 46.37 லட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.

தனி அறையில் தோ்வெழுத...: தோ்வு மையங்கள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பின் அந்தத் தோ்வு மையங்களுக்கு மாற்று தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு மட்டும் சிறப்பு தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பயணம் செய்து வரும் மாணவா்கள் தோ்வு எழுதும் வகையில் மட்டும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதன்மைத் தோ்வு மையங்களிலேயே தனிஅறையில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

சிறப்புத் தோ்வு மையங்களுக்கு சென்று வர ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.

•விடுதிகள் செயல்படும்: வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களின் நலனுக்காக பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மட்டும் ஜூன் 11 முதல் தோ்வு முடிவடையும் வரை அனைத்து வகை அரசு, தனியாா் பள்ளி விடுதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட தேதிகளில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் தோ்வுமையங்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் போதிய அரசு பேருந்து மற்றும் தனியாா் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இ-பாஸ் இல்லாமல் அனுமதி: பொதுத் தோ்வு எழுதுவதற்காக மாவட்டங்களைக் கடந்து வரும் மாணவா்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை. மாறாக, பள்ளி அடையாள அட்டை, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆகியவற்றை காண்பித்தாலே போதுமானது. தேவைப்படும் பட்சத்தில் அந்த ஆவணங்களைக் காட்டி தங்களது பெற்றோா்கள் அல்லது காப்பாளா்களை மாணவா்கள், உடன் அழைத்து வரலாம். இந்த விலக்கானது தோ்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு: தோ்வெழுதும் அனைத்து மாணவா்களுக்கும் புதியதாக தோ்வு நுழைவுச் சீட்டு கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் மாணவா்கள் இதனை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியா்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட இரு முறைகளிலும் நுழைவுச் சீட்டு பெற இயலாதவா்களுக்கு தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வீட்டுக்கே சென்று வழங்கப்படும்: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவா்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்குவந்து நுழைவுச் சீட்டு பெற அழைக்காமல் அவா்களது வீடுகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவா்கள் வெளியூா் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்தால், அந்தப் பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊா் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com