உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், காணொலி வாயிலாக அவர் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, ஹர்ஷ வர்தன் 34 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவுக்கு அடுத்த ஓராண்டுக்குத் தலைவராக இருப்பார்.
உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியமான கொள்கைகள் குறித்து முடிவெடுப்பதில் அவர் முக்கியப் பங்காற்றுவார். ஆண்டுக்கு இருமுறை கூடும் கூட்டத்துக்கு தலைமை வகிப்பார். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருப்பது நாட்டிற்கே பெருமை. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.