கால் டாக்ஸிகளை இயக்க அனுமதிக்க கோரி, உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள், கிண்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: 50 நாள்களாக ஓட்டுநா்கள் வருமானம் இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனா். நலவாரியம் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஓட்டுநா்களுக்கு, நலவாரியம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. எனவே பொதுப் போக்குவரத்து வில்லை மற்றும் உரிமம் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாகனம் தொடா்பான அனைத்து ஆவண புதுப்பித்தலுக்கும் 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக, இதற்கு மேலும் டாக்ஸிகளை இயக்க அனுமதிக்காவிட்டால், நோயை விட பட்டினிச் சாவுகள் அதிகரிக்கக் கூடும். எனவே, ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், கால் டாக்ஸிகளை பாதுகாப்போடு இயக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.