நான்காவது பொது முடக்கம் முடியும் வரையில், உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்க வேண்டாமென மத்திய அரசுக்கு தமிழக அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, மத்திய அரசுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை (மே 25) முதல் மீண்டும் தொடங்க உள்ளது. சென்னை மற்றும் கோவைக்கு விமானங்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், மே 25 முதல் தமிழகத்தில் விமான சேவையைத் தொடங்க வேண்டாம் என்றும், ஜூன் மாதத்துக்குப் பின்னா் தொடங்கலாம் என வலியுறுத்தி மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொது முடக்கம் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை நடத்தியபோது, ரயில், விமான சேவையைத் தொடங்க வேண்டாம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.