ஈரோடு மாநகரப்பகுதியில் உள்ள சாய, சலவை தொழிற்சாலை கழிவு நீர், காவிரியில் நேரடியாகக் கலப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல்படும் சாய, சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல் சாக்கடையிலும், ஓடையிலும் நேரடியாக திறந்து விடுகிறது. இக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து, ஈரோடு மாநகர பகுதி உட்பட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஊரடங்கால் இந்த ஆலைகள் அனைத்து மூடப்பட்டு, சாக்கடையும், காவிரியும் சுத்தமானது. கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக தளர்வு வழங்கப்பட்டு, இந்த ஆலைகள் திறக்கப்பட்டதால், 24 மணி நேரமும், பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடை உள்ளிட்ட அனைத்து கழிவு நீர் பாதையிலும் ஆலை கழிவுகள் ஓடி, நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனை அறிந்த அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
கடந்த இரண்டு நாட்களாக, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை வழியாக ஆலை கழிவு, நுரையுடன், பல்வேறு நிறத்துடன் சென்று காவிரியில் கலக்கிறது. நேற்றைய கழிவில் ஆசிட் தன்மை இருந்ததால், கண் எரிச்சல், தோலில் அரிப்பும் ஏற்பட்டது.
நேற்று, வைராபாளையம் பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் நேரடியாக பல நுாறு கனஅடிக்கு மேல் சாய, சலவை, தோல் ஆலை கழிவுகள் கலந்தது. அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தும், எவரும் வரவில்லை.