திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் கோயிலைத் திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் நூதன போராட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு அறிவித்த தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில்கள் திறக்கப்படாததால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே தகுந்த பாதுகாப்புடன் திருக்கோயிலை திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் கோயிலை நம்பி வாழும் லட்சக்கணக்கோரின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நுழைவாயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி ஒன்றிய செயலர் ராஜேந்திரன், நகரத்தலைவர் எம்.அரிகிருஷ்ணன், நகரப் பொதுச்செயலர் மு.முத்துராஜ், நகர பொருளாளர் ஆர்.மணி, நகரத் துணைத்தலைவர் எஸ்.மாயாண்டி உள்ளிட்ட 19 பேரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமையில் தாலுகா காவல் ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.