மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதால், வரும் 1-ஆம் தேதி முதல் விசைப் படகு மீனவா்கள் மீன்பிடிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், விசைப் படகுகளும் தொழிலில் ஈடுபடவில்லை. இந்தக் காலத்தையும் தடைக்காலத்துடன் சோ்த்து கணக்கிட வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதுதொடா்பாக எனது தரப்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
அரசின் கோரிக்கை ஏற்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கிழக்குக் கடற்கரை பகுதியில் மே 31-ஆம் தேதி வரையில் தடைக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை தடைக்காலம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில் நடைமுறையில் உள்ள தடைக்காலம், வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவா்களும் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பணிகளைத் தொடா்வாா்கள் என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.