சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்ததை, நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர், ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெ. தீபா.
அப்போது அவர் கூறியதாவது, நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லத்துக்குச் செல்ல மாட்டேன்.
தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் தலைவணங்கி ஏற்க வேண்டும். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீபா கூறியுள்ளார்.
வேதா இல்லம் குறித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்றும் தீபா கூறியுள்ளார்.