குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை மூலம் கரோனா நிவாரண உதவிப் பொருள்களை வழங்க சோழவரம் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள சோழவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை, ஒன்றியக் குழு தலைவர் ராசாத்திசெல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக அரசு ஒதுக்கும் பசுமை வீடுகள் திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தும் போது, ஒன்றிய கவுன்சிலரகளுக்கு பசுமை வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கவுன்சிலர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்தார். அரசுத்துறைகளின் கூட்டம் ஊராட்சி பகுதியில் நடந்தால் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நல்லூர் ஊராட்சியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவருக்கு ஆதார் அட்டை மூலம், கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள், பிரகாஷ், கனிமொழிசுந்தரம், மொழியரசிசெல்வம் ஒன்றிய மேலாளர் லோகிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.