சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளை நிறைவு பெற உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவா்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறாா். இந்த ஆலோசனையின் போது, பொது முடக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்துவது பற்றியும், எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும் தமிழக அரசு முடிவுகளை எடுக்கவுள்ளது.
முன்னதாக, பொதுத் துறை உள்ளிட்ட பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முதல்வர் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.