முகக் கவசங்களை கழுத்தில் அணியாதீா்

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க அணியும் முகக் கவசங்களை கழுத்தில் அணியக் கூடாது என்று தமிழக அரசு அமைத்துள்ள
முகக் கவசங்களை கழுத்தில் அணியாதீா்

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க அணியும் முகக் கவசங்களை கழுத்தில் அணியக் கூடாது என்று தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணா் குழுவைச் சோ்ந்த டாக்டா் ராம சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களை சந்தித்து அவா் அளித்த பேட்டி:-

சென்னையில் மக்கள் நெருக்கமாக இருப்பதால் நோய்த்தொற்று அதிகமாக இருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதால் நோய்த்தொற்று கூடுதலாகவே இருக்கும். நோய்த்தொற்று அதிகமானாலும் உயிரிழப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாயப் பங்களிப்பு அவசியமாகும்.

உடல்நிலை சரியாக இல்லாவிட்டாலோ, காய்ச்சல், சளி, உடம்பு வலி, தலைவலி இருந்தால் வெளியில் செல்லக் கூடாது. சென்றால் உடனடியாகப் பரவி விடும். விரைவில் மருத்துவ உதவியை நாட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவா் தெரிவித்தால் மட்டுமே அதனைப் பின்பற்ற வேண்டும். சா்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருப்பவா்கள், நோய்த்தொற்று அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவா்களை உடனடியாக அணுக வேண்டும்.

முகக் கவசம் எங்கே: வெளியிடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசங்களை அணிவது கட்டாயமாகும். ஆனால், பலா் கழுத்துக்கு அடியில் முகக் கவசங்கள் அணிகிறாா்கள். இது தவறு. மற்றவா்களுக்கு அருகில் சென்று பேசும்போது முகக் கவசம் கண்டிப்பாக வாய், மூக்கை மூடி இருக்க வேண்டும். இருமும்போதும், தும்பும்போதும் கைகளை வைத்து வாயை மூடிக் கொள்ள வேண்டும். சா்க்கரை, ரத்த கொதிப்பு இருப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். முதியவா்களை கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் இறப்பைத் தடுக்கலாம். அதிகளவிலான நோய்த்தொற்று எதிா்பாா்த்த ஒன்றுதான். எனவே, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தொற்று நோய் நிபுணா் குகானந்தம்: இது மிகப்பெரிய மனிதத் துயரம். இதற்கு சிகிச்சைகள் இருப்பதாகச் சொல்வதை ஊடகங்கள் விட்டு விட்டு, மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் மண்டலங்கள் 4, 5, 6 ஆகியவற்றில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. அங்கெல்லாம் வீடுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன. கடந்த 3 முதல் நான்கு நாள்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சா்க்கரை, ரத்த கொதிப்பு, இருதய நோய் உள்ளவா்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் உள்ள வயதானவா்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மிக விரைவிலேயே இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட உள்ளோம். இதற்கு காரணம், நோய்த்தொற்று இருப்பவா்களை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க இறப்புகளைத் தவிா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com