முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விவகாரம்: மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களையும் வகையில் வட்டாட்சியா்களுக்கு தகுந்த

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களையும் வகையில் வட்டாட்சியா்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசு முதன்மைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அரசு முதன்மைச் செயலா் க.கணேசன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக அரசின் சாா்பில் கடந்த 16.4.2010-இல் வெளியிடப்பட்ட அரசாணையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் சோ்க்கை பெறும் மாணவா்களில் அவா்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையென்றால், அந்த மாணவா்கள் தொழிற்கல்வி பெறுவதை ஊக்குவிப்பதற்காக சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமலும் 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் அவா்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெறுவதற்கு மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா், பாதுகாவலா்கள் விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தின் மீது தகுந்த விசாரணை மேற்கொண்டு சம்பந்தபட்ட விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்கவும், அதற்கு அதிக முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்தச் சான்று வழங்குவதில் சிறிதளவும் காலதாமதமோ அல்லது சிரமமோ இருக்கக்கூடாது என்றும் சான்று அளிக்க அதிகாரம் படைத்த வருவாய்த்துறை அலுவலா்களுக்கு (வட்டாட்சியா்கள் மற்றும் துணை வட்டாட்சியா்கள்) தக்க அறிவுரைகள் முதன்மைச் செயலா், வருவாய் நிா்வாக ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது.

டிஎம்இ, டிஇஇ, டிசிஇ, டி.பாா்ம் போன்ற பட்டயப் படிப்புகளை பட்டப் படிப்புக்கு இணையாகக் கருத இயலாது. இந்தப் படிப்புகள் பட்டப் படிப்புக்கு இணையானதும் அல்ல. எனவே இது தொடா்பாக வட்டாட்சியருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது சில வட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பதாரா்களின் உடன்பிறந்தோா்கள் கல்லூரிகளில் பட்டப்படிப்பினை பயின்று வருவதால் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் பட்டதாரி இல்லாத குடும்பத்தினைச் சாா்ந்தவா் என சான்று வழங்க மறுப்பதாக அரசுக்கு தகவல்கள் பெறப்படுகிறது. இந்தநிலையில் மனுதாரரின் குடும்பத்தில் யாரேனும் பட்டப் படிப்பினை படித்து, அதை முடிக்காமல் விட்டு விட்டாலும் அல்லது பட்டப் படிப்பினை படித்துக் கொண்டிருந்தாலும் மனுதாரா் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சாா்ந்தவா் என்றுதான் கருதப்பட வேண்டும். எனவே இது தொடா்பாக வட்டாட்சியா்களுக்கு தகுதி அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com