தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை அனுமதியின்றி 12 அடி ஆழ குழியில் இறங்கி வேள்வி பூஜை நடத்த முயன்ற சாமியாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் அசோக் என்ற சொக்கநாதர் (39). இவர் தனது 13வது வயதிலேயே ஊரைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ சொக்கநாதர் அகோரி முனிவர் என்ற பெயரில் சாமியார் தோற்றத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில் பொது மக்கள் நலம் பெற வேண்டி அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் வேள்வி பூஜை நடத்தியுள்ளார். மேலும் பூமியில் 12 அடி ஆழத்தில் குழி அமைத்து அதற்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு அவர் அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழிக்குள் அமர்ந்திருந்த சாமியாரை அதற்குள் இருந்து வெளியேற்றி காவல்துறையினர் குழியை மூடினர். உரிய அனுமதி இன்றி இதுபோன்ற பூஜைகளில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாமியாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.