திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் புதன்கிழமை காலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார். இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பெரியதுரை (32). இவர், பாஜகவின் திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி பொதுச்செயலராக இருந்து வருகிறார். அதே பகுதியில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்திற்கும், பெருமாள்புரம் 5 ஆவது தாமஸ் தெருவைச் சேர்ந்த ஜெபமணி (61) என்பவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை பெருமாள்புரம் தபால் நிலையம் அருகே ஜெபமணிக்கும், லெட்சுமணனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது பெரியதுரையுடனும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
பெருமாள்புரம் காவல் நிலையத்தில் முற்றுகையில் ஈடுபட்ட பாஜகவினர்.
இந்நிலையில், தனது துப்பாக்கியால் ஜெபமணி சுட்டாராம். துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெரியதுரையின் கையில் காயம் ஏற்பட்டதாம். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் ஜான்பிரிட்டோ தலைமையில் காவலர்கள் அங்கு சென்று ஜெபமணியை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
பாஜகவினர் முற்றுகை: இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாஜக பிரமுகர் பெரியதுரையின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் பாஜகவின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆ.மகாராஜன் தலைமையில் பாஜகவினர் பெருமாள்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.