சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அனல் மின்நிலையங்கள், புனல் மின்நிலையங்கள் மற்றும் மின் திட்டங்களில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் பதவிகளை ஒழிக்கக் கூடாது, துணை மின் நிலையங்கள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, பதவி உயர்வுகள், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக்கூடாது, அரசாணை 304 ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மாநில இணை செயலாளர் ஜெயச்சந்திரன் போராட்டத்தை தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு மின்வாரிய சம்மேளன மாநில இணை செயலாளர் கே.வி.ராஜேந்திரன், மின் கழக தொ.மு.சமாநில பிரச்சார செயலாளர் புகழேந்தி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். மாநில அரசுக்கு எதிராகவும் தமிழ்நாடு மின் வாரிய தலைவருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.