சென்னை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறவுள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொஹரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பணியாளர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்.
மேலும் இந்த வேல் யாத்திரை நிறைவடையும் இறுதி நாளான டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே வேல் யாத்திரைக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.