வாழப்பாடியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தக்காளி சாகுபடி அதிகரிப்பால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 
வாழப்பாடி தினசரி மண்டிக்கு விற்பனைக்கு குவிந்த தக்காளி.
வாழப்பாடி தினசரி மண்டிக்கு விற்பனைக்கு குவிந்த தக்காளி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தக்காளி சாகுபடி அதிகரிப்பால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு செல்லும் செலவிற்கே போதிய விலை கிடைக்காததால், வயலில் விளைந்து கிடக்கும் தக்காளியை அறுவடை செய்வதையை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால், தக்காளி மண்ணில் உதிர்ந்து வீணாகி வருகிறது. எனவே, தக்காளி பதப்படுத்தி பழச்சாறு, மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் ன, ஓரளவு நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள், அனைத்து விதமான உணவு சமையலுக்கும் பயன்படும் தக்காளியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே இயங்கும் தனியார் தினசரி காய்கறி மண்டிகளுக்கு, வாழப்பாடி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அருநுாற்றுமலை,  கல்வராயன்மலை கிராமங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், வாழப்பாடி தினசரி காய்கறி மண்டிகளில் ஏலமுறையில் தக்காளியைக் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில், கடந்த இரு மாதங்களுக்குமுன் பெய்த பருவமழையை பயன்படுத்தி,   ஏறக்குறைய 500 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்,  தக்காளியைப் பயிரிட்டனர்.
கல்வராயன்மலை கருமந்துறை, கரியகோவில் பகுதி மலைக்கிராமங்களிலும் ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரமாக, வாழப்பாடி தினசரி மண்டிகளுக்கு நாளொன்றுக்கு 10 டன் அளவிற்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது. 

குள்ளம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்படாததால், நிலத்திலேயே உதிர்ந்து வீணாகும் தக்காளி.
குள்ளம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்படாததால், நிலத்திலேயே உதிர்ந்து வீணாகும் தக்காளி.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், வாழப்பாடி தினசரி மண்டிகளுக்கு தக்காளி கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால், வாழப்பாடியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் ரூ.500 வரை விலை போன 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி  தக்காளி, கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக ரூ. 200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தக்காளியை செடியில் இருந்து பறித்து தினசரி மண்டிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும் செலவிற்கு போதிய விலை கிடைக்காதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செடியில் விளைந்து கிடக்கும் தக்காளியை அறுவடை செய்வதையை விவசாயிகள் சிலர் தவிர்த்து வருகின்றனர். விலைபோகாத தக்காளி விளை நிலத்திலேயே உதிர்ந்து வீணாகி வருகிறது.

இதுகுறித்து மாரியம்மன் புதூர் விவசாயி உழவன். இரா. முருகன்(46). கூறியதாவது:

வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த இரு மாதங்களாக பெய்த மழையைப் பயன்படுத்தி,  ஏராளமான விவசாயிகள் ஒரே நேரத்தில் தக்காளியைப் பயிரிட்டுள்ளனர். இந்த தருணத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்திலும் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் தாராளமாக தக்காளி கிடைப்பதால், வாழப்பாடிக்கு தக்காளியை கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. ஆனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு செல்லும் செலவிற்கே போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், தக்காளி  விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி,  நிவாரணம் பெற்றுக் கொடுக்க தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வாழப்பாடியில் தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் தருணத்தில், தக்காளி வீணாவதை தடுக்கவும்,  விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் தக்காளியை பதப்படுத்தி தக்காளி பழச்சாறு மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com