
தமிழக அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் இதே நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மக்கள் கடைபிடிக்க வேண்டும்: சுற்றுச்சூழலை பேணிக் காப்பதற்கு தீபாவளி பண்டிகையன்று, பொது மக்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
அதிக ஒலி எழுப்பும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும். எனவே, பொது மக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...