விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்குப் பின்னால் சிறிய தீயணைப்பு வாகனத்தில் நிலைய வீரர்கள் இருவர் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலம் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை கூறினார்கள்.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி: கோயம்பேட்டிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்புப் பேருந்துகள்
அவர்கள் கூறியதாவது, குறுகலான குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது. குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் கடை வீதிகளிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது. தமிழக அரசு அறிவித்துள்ள நேரப் படிப்பு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு பெட்டிகளில் பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என விதிமுறைகள் அச்சிடப்பட்டிருக்கும். அந்த விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு வெடிக்க வேண்டும். குழந்தைகளை தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. காலில் காலணி அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் வாலியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கையினால் எந்த பட்டாசும் வெடிக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் காப்பித்தூள் உள்ளிட்டவைகளை காயம்பட்ட இடத்தில் வைக்கக் கூடாது. தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் எனக் கூறினார்கள்.
இந்த ஊர்வலம் நான்கு ரத வீதி, பேருந்து நிலையம், காந்தி சாலை, வெம்பக்கோட்டை சாலை, காவல்நிலைய சாலை, காமராஜர் சாலை வழியே சென்று தீயணைப்புத்துறை நிலையத்தை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாட்டினை நிலைய தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் செய்திருந்தார்.