சென்னை: சித்த வைத்தியர் தணிகாசலம் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்தவர் வைத்தியர் தணிகாசலம். கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் காட்சிகள் பரவியது.
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தணிகாசலம் ஏற்கனவே அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில் தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.