கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் மேற்குமலை அடிவாரத்தில் தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதைக் காவல்துறை மோப்ப நாய் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா செடிகளைக் காவல்துறையினர் தீவைத்து அழித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகளில் வடக்கு காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலையில் தனிப்படை போலீசார் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ந. சின்னக்கண்ணு தலைமையில் ஆய்வாளர் கே. சிலைமணி, சார்பு ஆய்வாளர் எம். திவான்மைதீன் மற்றும் தனிப்படை போலீசார் மணிக்கட்டி ஆலமரம் சாலை மேற்குப் பகுதி மலையடிவாரத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது போலீஸ் மோப்ப நாய் வெற்றி, முள்செடிகள் அடங்கிய ஒரு புதருக்குள் சென்றது. போலீசார் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, சுமார் 5 சென்ட் நிலப்பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. இதையடுத்து பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பறித்து, தீவைத்து போலீசார் அழித்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, சுமார் 8 அடி உயரத்தில், 150 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. ஒரு செடியில் சுமார் 3.5 கிலோ எடையுள்ள கஞ்சா கிடைக்கும். அழிக்கப்பட்ட செடிகள் மூலம் சுமார் 500 கிலோ கஞ்சா கிடைத்திருக்கும். இந்தச் செடிகள் பயிரிடப்பட்ட இடம் யாருடையது, கஞ்சா பயிரிட்டவர் யார் என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.