தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்கு இரண்டாம் சுற்றில் தோ்வான மாணவா்கள் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சோ்க்கப்படுவா். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன.
இதற்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12-இல் தொடங்கி நவ.7-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 16,500 போ் வரை விண்ணப்பித்துள்ளனா்.
இதையடுத்து தோ்வான மாணவா்களின் பட்டியல் புதன்கிழமை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன. ஒரு பள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குழந்தைகள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.