விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை தொடர்மழை பெய்தது. இதனால் தீபாவளிப் பண்டிகை வியாபாரம் பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே மேகங்கள் திரண்டு காட்சியளித்தன. இந்நிலையில் நண்பகல் 12.30 மணிக்கும், பிற்பகல் 1.45 மணி மற்றும் 3.30 மணி என இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் திரண்டு ஓடியது.மிகவும் குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவியது.
வழக்கமாகப் பண்டிகைக்கு முதல் நாளில்தான் ஆலைத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் மிக அதிக அளவில் திரளாக வந்து, விழாக்கால சலுகைகளுடன் சந்தைகளில் விற்கப்படும் ஜவுளி, வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட பலபொருள்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்வர். ஆனால் தீபாவளிக்கு முதல்நாளான வெள்ளிக்கிழமை பகல்வேளையில் இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை தொடர்ந்து பெய்ததால் பொதுமக்களின் புழக்கம் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.