அம்பாசமுத்திரம்: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர்.
சனிக்கிழமை தீபாவளியைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் தமிழகத்தில் பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று குதூகலித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரவருணி நதியில் நீராட திருநெல்வேலி, தென்காசி, விருந்துநகர், தூத்துக்குடி,, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பாபநாசத்திற்கு குடும்பத்தினருடன் வந்தனர். பாபநாசம் தாமிரவருணியில் நீராடி பாபநாசம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் சென்றனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் குளிக்க பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து பாபநாசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பாபநாசம் கோவில் படித்துறை, அய்யா கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள், நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்து தாமிரவருணியின் அழகை ரசித்து மகிழ்ந்தனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.