குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 3 மணி நேரம் இடைவிடாது பலத்த மழை கொட்டியது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. பகலில் மழை ஓய்ந்திருந்தது. பின்னர் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் வானம் கருத்திருந்தது.
காலை 8 மணியளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் இடியுடன் கூடிய கனமழையாக பெய்தது. தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாது பலத்த மழை கொட்டியது. இதனால் நாகர்கோவில் மாநகரில் கோட்டாறு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி ஆராட்டு சாலை, மீனாட்சி புரம், அண்ணாபேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது.
திங்கள்கிழமை என்பதால் காலையில் அலுவலகம் செல்பவர்கள், பணி நிமித்தமாக வெளியே சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பலர் வாகனத்தை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றனர்.