பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ராயல் அவென்யூ மின் மாற்றியில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி புதன்கிழமை பலியானார்.
பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள ராயல் அவென்யூவில் உள்ள ஒரு மின் மாற்றியில்பழுது ஏற்பட்டது.
இதனை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளியான கணபதிபாளையம் ஒம் சக்தி நகரை சேர்ந்த நரசிம்மன் மகன் விஜயநாராயணன்(27) என்பவர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராவண்ணம் மின்சாரம் தாக்கி மின் மாற்றியிலேயே விஜயநாராயணன் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொ.மு.ச செயலாளர் சரவணன் கூறுகையில் மின் விபத்துகளில் பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணியில் அமர்த்தப்படுவதால் தான் இது போன்ற விபத்துக்களில் சிக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது உயிரிழந்த விஜயநாராயணன் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் மின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போதிய மின் ஆளுமை பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கு போதுமான மின் பாதுகாப்பு கருவிகள்,சாதனங்களை வழங்க வேண்டும் என்றார்.