வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ராணிபேட்டை மாவட்டம், ஆற்காட்டு பகுதியில் இருந்து மினி வேன் ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி இரவு சென்று கொண்டு இருந்தது. அதில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பயணம் செய்தனர். சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் எதிரே வந்துகொண்டு இருந்தனர். நெக்குந்தி என்ற இடத்தில் மினி வேன் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணம் செய்த செய்யாறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(32) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். வேன் டிரைவர் சேகர்(45) மற்றும் முருகன்(33) படுகாயம் அடைந்தனர்.
மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்(26), நடுப்பட்டறை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(20), பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர்(26) ஆகியோர் பலத்தகாயங்களுடன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மற்றும் சங்கர் உயிரிந்தனர்.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுக்கா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.