சென்னை: தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: குமரிக் கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மாலத்தீவுகள் முதல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும், பரவலான இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடியில் 170 மி.மீ. மழையும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 140 மி.மீ. மழையும் பதிவானது.
வரும் புதன், வியாழக்கிழமைகளில் தென்தமிழகப் பகுதிகளில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
கனமழையைப் பொருத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யக் கூடும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், புதன், வியாழக்கிழமைகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இதனால் குமரிக் கடல், மாலத் தீவு, லட்சத் தீவு, கேரள கடற்கரை, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்றானது மணிக்கு 45 முதல் 60 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். எனவே, மீனவா்கள் புதன்கிழமை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.