சென்னை: மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் நவம்பர் மாதம் இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக வரும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசம்பர் முதல் வாரத்துக்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால், நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்தனர்.
மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளியைத் திறக்க தனி நீதிபதி தடை விதித்த வழக்கு இதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 900 தள்ளு வண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லூப் சாலை மற்றும் மீன் சந்தைகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.