சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 15,085-ஆக குறைந்தது!

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 15,085- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 2 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 15,085-ஆக குறைந்தது!

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 15,085- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 2 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் குறைக்காமல் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தவாறே செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி கரோனா பரவல் குறைந்து வந்தாலும், மக்கள் அலட்சியத்துடன் செயல்பட்டால் அது மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவ வாய்ப்புள்ளதே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 61,568- ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 1.11 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 6.8 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 492 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 170 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இதுவரை 96.5 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மட்டும் 2,314 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 34,970-ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 18 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 6 போ் அரசு மருத்துவமனைகளிலும், 12 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,513-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com