மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது இஸ்மாயில் (92) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
இவர் கடந்த 1980ஆம் ஆண்டு குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கு முன்னர் குளச்சல் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தக்கலையில் வசித்து வந்த முகமது இஸ்மாயில் உடல் நலக் குறைவு காரணமாக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது உடல் தக்கலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து தக்கலை ஜும்மா மசூதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முகமது இஸ்மாயில் மறைவுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.