இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்: தமிழக முதல்வர் பழனிசாமி

இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள், அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள், அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள், இந்நாள். அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ள திருநாள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் பழனிசாமி நேரில் வழங்கினார்.

சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆற்றிய உரையில்,  இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள், இந்நாள். அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ள திருநாள், இன்றைய நாள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் நாள்.

தமிழக அரசு கொள்கை அளவில் நீட் தேர்வினை தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. இது தொடர்பாக பிரதமருக்கு நான் பலமுறை கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதுமட்டுமல்லாமல், சட்டப் போராட்டங்களை தொடர்ந்து அரசு நடத்தி வருகின்றது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும், நீட் தேர்வினை எதிர்கொள்ளத் தேவையான வசதியும், வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதனால், வசதி வாய்ப்புள்ள பிற மாணவர்களுடன் போட்டியிட்டு இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,251 ஆகும். இதில் 41 சதவிகிதம், அதாவது 3,44,485 மாணவர்கள் 3,054 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களேம். கடந்த ஆண்டு மருத்துவம் பயில வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இந்த நிலையை மாற்றிட வேண்டும் என நான் உறுதி கொண்டேன். ஏனென்றால், 41 சதவிதிகம் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, வெறும் 6 இடங்கள்தான் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து, உங்களுடைய மருத்துவக் கனவு லட்சியத்தை நிறைவேற்றிட, கடந்த மார்ச் மாதமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தேன்.

இதைச் செயல்படுத்த, முதற்கட்டமாக ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி,  இன்று பல தடைகளை தாண்டி, சட்டமாகி, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி உள்ளது. இதுவரை உங்களது குடும்பங்கள் எவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இனிமேல் உங்களுடைய குடும்பங்கள் மருத்துவர் குடும்பங்கள் என்றே அழைக்கப்படும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவிகித இடங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் சட்டம், ஆளுநர் அவர்களின் ஒப்புதலுடன் 30.10.2020 அன்று இயற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் மற்றும் 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

2011ஆம் ஆண்டில் மொத்தம் 1,945ஆக இருந்த மருத்துவப்படிப்பு இடங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், 2017 வரை 3,060 ஆக உயர்ந்தது. அரசின் நடவடிக்கைகளினால் தற்போது இது 3,650ஆக உயர்ந்து உள்ளது. அரசின் வரலாற்று சாதனையாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 1,650 புதிய இடங்கள் 2021-22 கல்வி ஆண்டு முதல் உருவாக்கப்படும். ஆக மொத்தம் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருகின்ற வரை 1990 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை வரலாற்றுச் சாதனையாக நான் கருதுகிறேன்.  2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் 1,945 மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கும் நிலை இருந்தது. இன்றைக்கு நான் முதலமைச்சராகப் பதவி வகித்த பிறகு, அடுத்த ஆண்டு, அதாவது 2021-22ஆம் ஆண்டு நடைபெறுகின்ற மருத்துவக் கலந்தாய்வுக் கூட்டங்களைப் பார்க்கின்றபொழுது மருத்துவப் படிப்பில் 1,990 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அரசு எந்தளவிற்கு செயல்பட்டுள்ளது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 227 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 86 இடங்களும் என மொத்தம், 7.5 சதவிகிதத்தால் 313 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) இடங்கள் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முன்னரே சொன்னது போல் சென்ற ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது. தற்போது 313 இடங்கள் கிடைத்துள்ளன.

இதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 80 இடங்களும், என மொத்தம் 92 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு பல் மருத்துவப் படிப்பில் (பிடிஎஸ்) இடங்கள் கிடைக்கும்.

இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த மாணாக்கர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையின் கீழ், எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன்.

எனக்கு முன்னால் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்த 7.5 சதவிகித இடஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கிடைப்பதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கைகள் வைக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். அரசுப் பள்ளிகளில் 41 சதவிகித மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, சுமார் 3,44,485 மாணவர்கள் படிக்கின்றார்கள், அதில் 6 மாணவர்களுக்குத் தான் கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், 41 சதவிகித மாணவர்களைப் புறக்கணிக்கின்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது என்ற எண்ணம் தோன்றிய காரணத்தினால்தான், அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற, சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றபோது அவர்கள், ஏழைகளுக்கு மருத்துவச் சேவை செய்ய முன்வருவார்கள். ஏழைகளுக்கு என்ன சிரமம் இருக்கின்றதென்பதை அவர்கள் வாழ்வில் அனுபவித்த காரணத்தினால், அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று மருத்துவர்களாக வருகின்றபோது, ஏழை மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை செய்வார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஏழைகளும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கிய அரசு எங்களது அரசு.

ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2,000 சிறு மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். 

அதுமட்டுமல்லாமல், இங்கே அமர்ந்திருக்கின்ற அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் அழுதுகொண்டே சொன்னார்கள், ஒரு தொழிலாளி அவருடைய நிலையை இங்கு சொன்னார். அவருடைய மகளுக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று எண்ணித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், இன்றைக்கு அரசு உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவம் பயில இடம் கிடைத்திருக்கின்றது என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார். இப்படி ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கக்கூடிய வசதியை எங்களது அரசு தொடர்ந்து செயல்படுத்தும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அளிக்கும். தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதிகளில் நல்ல தரமான மருத்துவ சேவை அளிக்க இப்படிப்பட்ட மாணவச் செல்வங்களை, எங்களுடைய அரசு ஊக்குவிக்கும். அவர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவச் சேவையை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு பெற்ற உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெகு தொலைவில் இருந்து வந்திருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்தாய்வு முடிந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கலந்தாய்வை சிறப்பாக நடத்துவதற்கு அடித்தளம் அமைத்த அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய அந்தத் துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com