சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இணையதள முகவரிகளில் கடந்த செப்டம்பர் மாதம் மாதம் 24-ஆம் தேதி தொடங்கின. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோர் 9 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் சமா்ப்பித்தனா். மொத்தம், 15 ஆயிரத்து 580 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 13,901 பேருக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (நவ.18) வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என கூறினார்.