கீழப்பாவூர் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணி தீவிரம்
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கொட்டுகிறது. இதைத்தொடர்ந்து பாவூர் அணைக்கட்டு பகுதிக்குக் குற்றாலம் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில், அங்கிருந்து கால்வாய் மூலம் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு கடந்த சில நாள்களாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் மேலப்பாவூர் குளமும் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலப்பாவூர் மற்றும் கீழப்பாவூர் குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருப்பதால் அக்குளங்களின் பாசன வயல்களில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை தொடங்கியுள்ளனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து குளம் நிரம்பினால் நிகழாண்டு நெல் பயிர் விளைச்சலுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.