நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வேலைவாய்ப்பு கோரி முதல்வரிடம் மனு அளித்த நிலையில் அவருக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சேலம் நோக்கி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சாலைவழியாக புதன்கிழமை இரவு காரில் வந்து கொண்டிருந்தார். நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அப்போது இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த சாதிக் பாஷா (35) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், முதல்வரிடம் வேலைவாய்ப்பு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
குமாரபாளையத்தில் பணி நியமன ஆணையை வழங்கும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி.
அந்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணினி பிரிவில் இளைஞர் சாதிக் பாஷாவுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாற்றுத்திறனாளி சாதிக் பாஷாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு பெற்ற அவர் முதல்வருக்கும், மின்சாரத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.